சிந்தனை செய்!(தலைப்பு)
எல்லோருக்கும் இனிய 64வது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
மகனே!
என்ஜினியராகவோ
டாக்டராகவோ
ஆகி
என்ன சம்பாதித்து
விடுவாய்?
எவ்வளவு செலவானாலும்
பரவாயில்லை,
எப்படியாவது
பீகாரிலோ
உத்தரபிரதேசத்திலோ
ஜார்கண்டிலோ
எம் எல் ஏ
ஆகிவிடு.
மேலவைத் தேர்தலில்
உன்
ஓட்டைவிற்றே
கோடீஸ்வரன் ஆகலாம்.
காசுபடைத்தவன் வீட்டு
பிள்ளையாய் பிறந்திருந்தால்
கண்டபடி காரையோட்டி
யாரையும் கொல்லலாம்,
இந்தியா-
ஏழைகளின் நாடு.
சிந்தனை செய்
ஏழையை எளிதாய்
கொல்லலாம்.
விளையாட்டுத்துறை
ஏன் ஆனது
விவகாரத்துறை?
காதோர
நரைக்கிழடுகளிடம்
கற்புநெறி காணாமல்
போனது ஏன்?
சிந்தனை செய்.
சிந்தனை செய்
செய்து,
எப்பாடு பட்டேனும்
காமன்வெல்த் கமிட்டியில்
இடம் பிடித்துவிடு!
இல்லையென்றாலும்-
அதன் விளையாட்டு
வியாபாரத்தில் அங்கமாகிவிடு!
லட்ச்ச லட்ச்சங்களை
எளிதில் லாவிவிடலாம்.
பட்டப்பகலெல்லாம் பாம்பாய் நெளியும் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் நாம் அனுப்பிய கனவான்கள் சதிராட்டம் ஆடி கோடிகளை கொளுத்துகிறார்களே- சிந்தனை செய், வெகுஜனமே மீண்டும் வருகிறது தேர்தல்.
படைத்தவனையும் நீ வியாபாரப் பொருளாக்கி கலர்கலர் போர்வையில் கடைவிரித்து செய்யலாம் வியாபாரம். வீடியோ கேமராவிடம் மட்டும் வேண்டும் கவனம்!!
வீரப்பன் வீழ்ந்துவிட்டான். என்ன கடத்தலாம், சிந்தனை செய். மரம், தந்தம் போதைப் பொருள்… எதுவானாலும் சரி! காக்கிசட்டைகள் கஞ்சி குடிக்க கைக்கூலியை நம்பித்தானே கழிக்கிறார்கள் நாட்களை!
வாகனங்களில் வந்துபோகும்போது சாலையின் நிறுத்தக்கோட்டில் நிற்பது கேவலமென்று கருதுகிறாயே ஏனென்று சிந்தனை செய். |
விடியாத பொழுதுகளிலும் விளக்குவைத்த பின்னரும் டியூஷன் டியூஷன். இடைப்பட்ட நேரத்தில் ஏகப்பட்ட பாரத்தோடு பள்ளிக்கு படையெடுப்பு! கொட்டிக்கொடுத்த பணம்- கொண்டு வரவில்லை நீ- மனதிற்கொண்ட மதிப்பெண்ணை! ஏனென்று, இனியாவது சிந்தனைசெய், தகப்பனே!
சிந்தனை செய்! கட்டிங் அடித்துவிட்டுப்போனால் கத்தப்போகும் கட்டியவளிடம் காரணம் என்ன கூறுவாய் என்று- இப்போதே சிந்தனை செய், என் சிட்டிசனே!
எப்படி சொல்லியும் எவ்வளவு அழுதும் இன்னமும் இணைபிரியாது இருக்கும் இல்லாளும் எரிச்சலூட்டும் நெடுந்தொடர்களும் எப்போது பிரிவார்கள் எப்போது பிரிவார்கள் சிந்தனை செய், ஆண் இனமே சிந்தனை செய்.
யாருக்கும், எதற்கும் கையூட்டுக் கொடுத்தால் ஆகிவிடும் காரியம். கொடுப்பதற்கும்- அடுத்தவனிடம் பறிப்பதற்கும் எப்படித் தயாரானாய் நீ? செம்மையாய். சிந்தனை செய்
சிந்தனை செய்வீர் என் சிட்டி டீ வி நேயர்களே! இந்த 64வது இந்திய சுதந்திர தினத்திலாவது ஏற்போம் ஒரு சபதம்!
இயன்றவரை எதனையும் யாரையும் நம் சுயநலத்திற்காய் விலை பேசாதிருக்க ஏற்போம் ஒரு சபதம்!
நம் தனிமனித ஒழுக்கம் தரக்கூடும், தரமான இந்தியாவை இன்னும் ஈரைந்து ஆண்டுகளில்.
ஆதலினால், இன்றே ஏற்போம் சபதம்….. எதையும் விலை பேசாதிருக்க, எதையும் விலை பேசாதிருக்க இன்றே ஏற்போம் சபதம்….. (சிட்டி டிவிக்காய் அந்தமான் தமிழர் சங்கத்தில் 09.8.2010 அன்று பதிவு செய்தது. 2Gக்கு முன்பு.)
|